இயற்கையில் எதுவுமே மாற்றமில்லாதது என்ற கூற்றே சரியில்ல. ஒளிவேகம் ஒன்றுதான் மாறாதது. இதுவும்கூட தற்காலத்திய மனிதனின் புரிதல்தான். நாளை இதுவும் மாறலாம். டார்வினின் தியரிபடி எந்த உயிரினத்திற்கும் பெயர் சூட்ட முடியாது. உயிரனங்களின் ஒவ்வொரு தலைமுறையிலும் மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இன்று நாம் யானை என்று சொல்வதை ஐயாயிரம் ஆண்டுகள் கழித்து அப்படிச்சொல்ல முடியுமா என்று தெரியாது. இப்போதுள்ள யானையின் குணங்கள் அப்போது மாறியிருக்கலாம். இதுவே பரிணாம வளர்ச்சி. இதில் வளர்ச்சி என்ற வார்த்தையை கவனமாக உபயோகிக்கவேண்டும். எந்த உயிரினமும் பரிணாம மாற்றத்தை தான் தன் விருப்பம்போல திட்டம் செய்ய முடியாது. இயற்கை டிஎன்ஏக்களில் மாற்றங்களை யதேச்சையாக செய்கிறது. ஒவ்வொரு இனத்திலும் ஒவ்வொரு உயிரிலும் சில மாற்றங்களைச் செய்து செய்து பார்க்கிறது. எது காலத்தில் தொடர்ச்சியாக நிலைபெறுகிறதோ அதையே நாம் பரிணாம வளர்ச்சியாக காண்கிறோம். இதுவே இயற்கைத்தேர்வு எனப்படுகிறது.
இயற்கையல்ல என்று எதையும் ஆராய்ச்சியில்லாமல் நிராகரிக்க முடியாது. இது இயற்கை இது இயற்கையல்ல என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லமுடியாது, கூடாது. இந்தியச்சட்டம் 377ன் படி, இயற்கையான உடலுறவு என்பது என்ன என்பது மிகப்பெரிய கேள்வி. உடலுறவு என்பது தலைமுறை நீட்டிப்பதற்கு என்று கொண்டால், வாய்வழிபுணர்ச்சி என்பதும் தவறாகிறது, காண்டம் உபயோகிப்பதும் தவறாகிறது, சுயஇன்பமும் தவறாகிறது. இந்தியாவின் பாதி மக்கள்தொகை சட்டத்திற்குப் புறம்பானவர் ஆகிவிடுவர்.