குறும்பா 13 (குறுந்தொகை 229)

சின்ன வயசுல முடிய இழுத்துச் சண்டப்போட்டவங்க, இப்போ மாலை மலர்களமாதிரி பிணைஞ்சு இருக்காங்க. ஓ விதியே, நீ நன்மையுடையதுதான்.

அட, இங்கப்பார்றா. சின்ன வயசா இருக்கும்போது, இவன் இவளோட பிண்ணினக் கூந்தலப் பிடிச்சு இழுத்துவிட்டுக் கிண்டல் பண்ணுவான். அவளும், சளைக்காம அவனோடப் பரட்டத்தலையக் கலைச்சுவிட்டுட்டு ஓடிடுவா. அவங்க ரெண்டுப்பேர் சண்டைய செவிலித்தாய்ங்கதான் நிறுத்திவெப்பாங்க. எப்போப்பாத்தாலும் சண்டப்போட்டுட்டு, ரெண்டுப்பேருக்கும் என்னப் பண்ணாலும் ஒத்தே வராதுங்கறமாதிரி இருந்தாங்க.

இப்போ பாரு. மாலையில இருக்குற மலர்களமாதிரி, பிண்ணிப் பிணைஞ்சு, ஒருத்தரவிட்டு ஒருத்தர் பிரியாம இருக்காங்க.

ஓ விதியே, நீ நன்மையுடையதுதான்.

இவனிவ ளைம்பால் பற்றவு மிவளிவன்
புன்றலை யோரி வாங்குநள் பரியவும்
காதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிரா
தேதில் சிறுசெரு வுறுப மன்னோ
நல்லைமன் றம்ம பாலே மெல்லியற்
றுணைமலர்ப் பிணைய லன்னவிவர்
மணமகி ழியற்கை காட்டி யோயே

(மோதாசனார்)


தேட ஆரம்பியுங்கள்... / Start typing to search...
விஜய் ரெங்கராஜன் — கதைகள் பற்றி கேளுங்கள்
வணக்கம்! விஜய் ரெங்கராஜனின் சிறுகதைகள் பற்றி கேள்விகள் கேளுங்கள். Tamil or English — both work.