குறும்பா 24 (குறுந்தொகை 68)

எம்மேல தாங்கமுடியாத குளிரு படர்ந்து வாட்டிட்டு இருக்கு. இதுக்கு வேற எந்த மருந்தும் வேண்டா, நான் கட்டியணச்ச அவனோட மார்பத்தவர.

நம்ம புஞ்சையில பயிரிட்டுருக்குற உளுந்தோட காலப்பாத்தீன்னா, கொஞ்சமா வேரு வெளியத்தெரிஞ்சு, உளுந்தோட அடித்தண்டு காடையோடக் கால அச்செடுத்தாமாதிரியே இருக்கும். இந்த முன்பனிக்காலத்துல உளுந்தோடக் காயெல்லாம் முதிஞ்சுபோய் இருக்கும். அந்தக் காய்ங்கள மானுங்க வந்து சத்தம்போடாம கவர்ந்து சாப்ட்டுட்டு இருக்கும்.

இதே முன்பனிக்காலத்துல பாரு தோழீ, எம்மேல தாங்கமுடியாத குளிரு படர்ந்து வாட்டிட்டு இருக்கு. இதுக்கு வேற எந்த மருந்தும் வேண்டா, நான் கட்டியணச்ச அவனோட மார்பத்தவர.

ஆனா இந்த என் துன்பத்தத் தீக்க, முதிஞ்சுபோய்கிட்டு இருக்குற என்னக் கவர, அவன் எங்கூட இல்லயே.

பூழ்க்கா லன்ன செங்கா லுழுந்தின்
ஊழ்ப்படு முதுகா யுழையினங் கவரும்
அரும்பனி யச்சிரந் தீர்க்கும்
மருந்பிறி தில்லையவர் மணந்த மார்பே

(அள்ளூர் நன்முல்லை)


தேட ஆரம்பியுங்கள்... / Start typing to search...
விஜய் ரெங்கராஜன் — கதைகள் பற்றி கேளுங்கள்
வணக்கம்! விஜய் ரெங்கராஜனின் சிறுகதைகள் பற்றி கேள்விகள் கேளுங்கள். Tamil or English — both work.